Pages

Thursday, 15 August 2013

குட்டை பாவாடையும் குனிந்து விளையாடும் பெண்களும்

துள்ளலில் உயரும் பாவாடையுடன்
நீ விளையாடத்துவங்குகிறாய்

புரண்டெழும் மிருகத்தின் சுவாபங்களுடன்
விழித்தெழுகிறது கடல்

கருகிருட்டில் வீழும் வெண்பறவையாய்
மிருகத்தின் நகங்கள் முளைக்கின்றன

தொலைந்த பயணத்தின் தொலைவை அளவிட
புதிய பயணங்களை துவக்குகிறாய்

ஒருவேளை
நீந்திகடக்க இக்கடல் அனுமதிக்கும்

கடலுக்கும் பயணங்களுக்கும்
உன்னைபோல ஒடுங்கிப்போகும் பாக்கியம் வாய்த்ததில்லை

என்னையும் அலைகளையும்
சிப்பிகள் சேகரிக்கும் குழந்தையாய் மாறிய நீயும்
ஒரு குவளை தேநீருடன் கைநீட்டகூடும்

உன் வீட்டின் கதகதப்பான மூலையில்
நீ தொலைத்த முத்தத்தில்
இடம்பெயர்ந்த குன்னிமுத்துக்களை
சேகரிக்க திரும்பும் பால்யத்தின் நினைவுகளை
அனுப்பமறுத்த வள்ளங்கள்
மணல்வெளியின் கருணையில் துயில்கின்றன

பல்லாங்குழியில் தடுமாறும் காதலை
பல்லாங்குழியின் எதிர்துருவத்திலேயே எதிர்கொள்கிறாய்

உயரதுடித்த அலைகள் மடிந்து பின்வலிகின்றன

சாத்தானின் குழந்தைகள் உன்னோடு பொருதுகின்றன

நீ வரிசைபடுத்திய புகைபடங்களில்
அறியாமையின் திமிர் எட்டிபார்க்கிறது

என் வருகைக்காக தவறவிட்ட உன் இளமையை
கௌவி நீந்தும் மீன்களை

அன்பால் நீ உகுத்த கண்ணீரை உறிஞ்சும் விரால்களை

பத்தாயத்தில் உறங்கும் நம் கடவுளை
இக்கடலுக்குள் கொண்டுவர
நீ உதிர்க்கும் பிரார்த்தனைகளை

களைப்பற்ற தொடர் நீச்சலில்
திணறா சுவாசத்தின் பிடிவாதத்தை

மீன்களின் வயிற்றில்
நெடு உறக்கத்தை துவங்கஇருக்கிற என்னில்

உடைகள் உன் எதிரியைப்போல
துவைத்து எறியும் பந்தின் போக்கில்

யுத்தத்தின் கடைசியில் உடைகளை களைகிறாய்

கேடயங்களில் நீ காயவைத்த உள்ளாடைகள்

வானமும் திசையும் நீங்கா துருவநட்சத்திரமும்
பயணங்களுக்கான திசைகாட்டிகளல்லவென்பதை
தாமதமாக உணரும் உன் புதைவெளி பயணங்கள்

கடித்துபிடித்தபடி தொடரும் மீன்களைபோல
கண்ணாடி பேழைக்குள் நீந்துகிறாய்

உன் சுவாசத்தின் உணர்வில்
மீன்களின் ரத்தவேட்கை படிகிறது

கலங்கரைவிளக்கங்கள் அனுப்புகிற ஒளியில்
உன் வியர்வையின் வசீகரம் கலந்து வருகிறது

வேட்டையாட காத்திருக்கிற மீன்களின்
கண்களில் தெரிகிற வெறிகலந்த ஏளனத்தை

உன் சதைகூடு விசித்திர இரையாக மாறிக்கொண்டிருப்பதை

கடல் விரித்த பொறியிலிருந்து தப்பிக்க
நீரோட்டத்தில் இழுக்கப்படும் அறியாத பயணத்தைபோல

யோனாவின் பேழையில் நிரப்பபட்ட
எனக்கு மறுக்கப்பட்ட இடத்தில்
உதாசீனங்களின் காதலைபோல

புதிய உலகில் பேழையிலிருந்து இறங்கும் உன் பாதங்களில்
முரட்டுபாதரட்சையின் அவசியத்தை

பாவாடைநாடாவில் தொங்கும் மரணதூதர்கள்
விளையாட்டின் விதிமுறைகளை மீறுகையில்

வனாந்தரத்தின் ஒற்றையடி பாதையை
கடல்வெளியில் தேடும் உன் மனஆசைகளை

இரைப்பையில் தங்கிவிட்ட கொடூரபசியை தூண்டுகின்றன
விளையாட்டின் கடைசியில்
நீ பறக்கவிட்ட முத்தங்கள்

குட்டைபாவாடையுடன் குனிந்துவிளையாடும் பெண்கள்
தருவிக்ககூடும்
இக்கடலுக்குள் அமிழ்ந்திடும் உடல்களுக்கான சவப்பெட்டிகளை.
                                                                                                                            -  குருசு.சாக்ரடீஸ்     

No comments:

Post a Comment